தூத்துக்குடியில் படகில் தூங்கிய மீனவர் கொலை - 6 பேர் கும்பலை பிடிக்க போலீஸ் தீவிரம்


தூத்துக்குடியில் படகில் தூங்கி கொண்டிருந்த மீனவரை வெட்டிக் கொலை செய்த 6 பேர் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி, சுனாமி காலனி, தாய் நகரைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் தங்கராஜ் (25). சங்கு குளி மீனவரான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை, தூத்துக்குடி வடபாகம் போலீஸார் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து கண்காணித்து வந்தனர். தங்க ராஜ் கிடைத்த வேலைக்கு சென்றுவிட்டு தினமும் ஏதாவது ஒரு இடத்தில் படுத்து தூங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு திரேஸ்புரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகில் படுத்து தூங்கியுள்ளார்.

நேற்று அதிகாலை பலத்த வெட்டுக் காயங்களுடன் தங்கராஜ் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ஏஎஸ்பி மதன், கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, வடபாகம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கும்பல் தங்கராஜை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

இதுக் குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். 3 தனிப்படையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். முன்விரோதத்தில் இந்த கொலை நடந்ததா, வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 கொலைகள் நடந்துள்ளன. இதையடுத்து போலீஸார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

x