நடிகர் நெப்போலியனின் மகன் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருநெல்வேலியை சேர்ந்த ஜீவன் அறக்கட்டளை மற்றும் நெப்போலியனின் சகோதரர் சார்பில், எஸ்.பி.யிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ். தசை குறைபாடு உடைய மாற்றுத் திறனாளியான இவருக்கும், திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப் பட்டியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தனுஷின் உடல்நிலை, அவரது குடும்ப வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் கருத்துகள் பரப்பப்பட்டன.
இந்நிலையில், ‘நெப்போலியன் மகன் தனுஷ் மீதான அவதூறு கருத்துகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும். பதிவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரி, நெப்போலியனின் ஜீவன் டிரஸ்ட் மற்றும் நெப்போலியனின் சகோதரர் கிருபாகரன் சார்பில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.