சாயர்புரத்தில் பெண் கொலை - கணவர் தலைமறைவு


தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் பெண்ணை கொலை செய்த கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சாயர்புரம் நம்மாழ்வார் நகரைச் சேர்ந்தவர் மரிய சாமுவேல் (60). இவரது மனைவி ஜோஸ்பின் (57). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.இருவருக்கும் திருமணமாகி மூத்த மகன் பெங்களூருவிலும், இளைய மகன் தென் ஆப்பிரிக்காவிலும் வசிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக மரிய சாமுவேலுக் கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்று காலையில் ஜோஸ்பினின் மூத்த மகன் அருள்ராஜ் தனது தாய்க்கு போன் செய்துள்ளார். ஆனால், அவர் பதிலளிக்காததால் மாலையில் தனது மாமா (தாயின் தம்பி) ஜான்போஸ்கோவுக்கு தகவல் தெரிவித்து, வீட்டுக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார். அவர் சென்று பார்த்தபோது வீடு பூட்டியிருந்தது. ஆனால் வீட்டின் முன்பிருந்து வழிந்த ரத்தம் ஊருக்கு வெளியே வரை பரவி கிடந்தது.

அதை பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது, அங்குள்ள பாலத்தின் கீழ் ஜோஸ்பின் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சாயர்புரம் போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். காவல் ஆய்வாளர் விஜய லெட்சுமி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து ஜோஸ்பின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மரிய சாமுவேலுக்கும் ஜோஸ்பினுக்கும் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளதும், ஆத்திரமடைந்த மரிய சாமுவேல் மனைவியை கொலை செய்து ஊருக்கு வெளியே உள்ள பாலத்துக்கு அடியில் உடலை போட்டு விட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இது குறித்து சாயர்புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மரிய சாமுவேலை தேடி வருகின்றனர்.

x