திருவாரூர் தெற்கு வீதியில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ராஜாங்க கட்டளை தருமபுரம் ஆதீனம் மடம் உள்ளது. இங்கு வளர்க்கப்படும் பசுவில் பால் கறப்பதற்காக மடத்தின் ஊழியர் நேற்று அதிகாலை சென்றார். அப்போது, மடத்தின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிந்தது. இதையடுத்து, மடத்தின் நிர்வாகிகள் வந்து ஆய்வு செய்தபோது, மடத்தில் இருந்து பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.88,000 ரொக்கம் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து மடத்தின் கண்காணிப்பாளர் அருள், திருவாரூர் நகர போலீஸாருக்கு தகவல் அளித்தார். இதன் பேரில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் போலீஸார் சென்று மடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த ஜெகபர் சித்திக் (35), மடத்தில் திருட்டில் ஈடுபட்டதும், நாகையில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் நாகை சென்று ஜெகபர் சாதிக்கை கைது செய்து, குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.