பேராவூரணி அருகே சத்துணவு அமைப்பாளர் மர்ம மரணம் - கணவரிடம் போலீஸ் விசாரணை


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள ஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (45). ஓட்டுநர். இவரது மனைவி கற்பகசுந்தரி (32), ஒட்டங்காடு அரசு உதவி பெறும் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தம்பதி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, சிறிது நேரத்துக்குப் பிறகு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது கற்பகசுந்தரி வீட்டில் மயங்கிக் கிடந்துள்ளார். இதையடுத்து, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவரை மருத்துவர்கள் பரிசோதித்து ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து கற்பகசுந்தரியின் தந்தை செல்ல முத்து அளித்த புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், கற்பகசுந்தரி உயிரிழப்பி்ல் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி, பேராவூரணி- பட்டுக்கோட்டை சாலையில் பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில் கற்பகசுந்தரியின் உறவினர்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தர்மேந்திரா, டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி மறியலை முடித்துக் கொள்ளச் செய்தனர். கற்பக சுந்தரியின் உடல், உடற்கூறாய்வு செய்யப்பட்டு ஒட்டங்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், திருச்சிற்றம்பலம் போலீஸார் ராம மூர்த்தியை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

x