காதலித்த பெண்ணை எரித்துக் கொன்ற இளைஞர் கைது - திண்டுக்கல் பயங்கரம்


கன்னிவாடி அருகே காதலித்து வந்த பெண்ணை எரித்துக் கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனப்பகுதி அமைதிச் சோலையில் உள்ள நீரோடை அருகே கடந்த 13ம் தேதி இளம்பெண் உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதிக்கு சென்றவர்கள் தகவல் தெரிவித்தனர். கன்னிவாடி போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று ஆய்வு செய்து உடலை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில் அப்பெண் பெற்றோர் இல்லாததால் ஆதரவற்ற இல்லத்தில் வசித்து வந்ததும், திண்டுக்கல்லில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்த மாரியம்மாள் (20) என்பதும் தெரியவந்தது. இவரும் சாணார்பட்டி அருகே கைலாசபட்டியைச் சேர்ந்த பிரவீன் (23) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மாரியம்மாள், பிரவீனை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் மாரியம்மாளை, பிரவீன் அமைதி சோலை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த கன்னிவாடி போலீஸார் பிரவீனை கைது செய்தனர்.

x