போதைப் பொருள் கடத்தல் மூலமாக சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் டெல்லியில் கைதான திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் 26-ம் தேதி சிறை மாற்று வாரண்ட் மூலமாக கைது செய்தனர். பின்னர் அவர் சென்னையில் உள்ள புழல் சிறைக்கு கொண்டு வரப்பட்டார். இந்த வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை அமலாக்கத் துறையினர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர்.
இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில், ஜாபர் சாதிக் முன்னாள் திமுக நிர்வாகி என்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகக் கூறி அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பதிலுக்கு மனுதாரர்கள் தரப்பில், கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், இதற்காக நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதான மணிஷ் சிசோடியா தீர்ப்பை முன் மாதிரியாகக் கொண்டு, இருவருக்கும் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு ள்ளார்.