திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்தவர் சிவஞானமூர்த்தி. பனியன் நிறுவன அதிபர். தொழில் தேவைக்காக பணம் தேவைப்பட்ட நிலையில், குறைந்த வட்டியில் கடன் பெற ஒருவர் உதவியுடன், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை அணுகினார். கோடிக்கணக்கில் கடன் பெற சிவஞானமூர்த்தி, பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி கடன் தொகையை பெற்றுத்தரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கொடுத்த பணத்தை திருப்பிக்கொடுக்குமாறு சிவஞான மூர்த்தி, பவர் ஸ்டார் சீனிவாசனிடம் கேட்டுள்ளார். அதற்கு பவர்ஸ்டார் சீனிவாசன் காசோலைகளை சிவஞானமூர்த்திக்கு வழங்கினார். ஆனால் அந்த காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பின. இது குறித்து சிவ ஞான மூர்த்தி திருப்பூர் காசோலை வழக்கு விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு தொடர்பாக பவர் ஸ்டார் சீனிவாசன் நேற்று காலை நீதிபதி ரஞ்சித் குமார் முன் ஆஜரானார். பவர் ஸ்டார் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”குறைந்த தொகையைத்தான் திருப்பிக் கொடுக்க வேண்டும். ஆனால் அதிக பணம் கேட்டு வழக்கு தொடுத்துள்ளதால், இதனை நீதிமன்றம் மூலம் எதிர்கொள் கிறேன்” என்றார்.