மத்திய அரசு பள்ளியில் சேர்த்துவிடுவதாக கூறி, திருப்பூர் காவலரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றுபவர் மணி (44). இவர் தனது குழந்தைகளையும், சகோதரியின் குழந்தைகளையும் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனத்தில் சேர்க்க விரும்பினார். இதற்காக கார்த்திகேயன் என்பவரை தொடர்பு கொண்டுள்ளா ர். அவர் தனது நண்பர்களான சின்னச்சாமி, மேகநாதன், கந்தவர் சிங், பெருமாள் ஆகியோருடன் சேர்ந்து அந்த பள்ளியில் சேர்வதற்கான ஆணை பெற்றுத்தருவதாக கூறி காவலர் மணியை நம்ப வைத்துள்ளார்.
இதனை நம்பிய காவலர் மணி, பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக அவர்களிடம் ரூ. 5 லட்சம் கொடுத்தார். இதையடுத்து அந்த கும்பல் போலி சேர்க்கை ஆணையை மணியிடம் தந்தது. இதையடுத்து அந்த போலி ஆணையுடன் தனது மகனை பள்ளியில் சேர்க்க சென்ற காவலர் மணிக்கு, அது போலி சேர்க்கை ஆணை என தெரியவந்தது.
இது குறித்து மணி அளித்த புகாரின் பேரில் கார்த்திகேயன், சின்னச்சாமி, மேக நாதன், கந்தவர் சிங், பெருமாள் ஆகியோர் மீது தெற்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.