ராமநாதபுரம் அருகே இளைஞரை வெட்டிக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை


ஆயுள் தண்டனை பெற்ற வைத்தீஸ்வரன்.

ராமநாதபுரம்: இளைஞரை வெட்டிக் கொலை செய்தவருக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை தெற்கூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுக்கிளி மகன் சிவகுமார்(22). அதே ஊரைச் சேர்ந்தவர் வைத்தீஸ்வரன்(35). கூலித்தொழிலாளியான இவர் சிவக்குமாரின் பெரியப்பா மகளை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் சிவகுமாருக்கும், வைத்தீஸ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து சிவகுமாரையும் அவரது தந்தையையும் வைத்தீஸ்வரன் தாக்கியது தொடர்பாக கேணிக்கரை போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 13.06.2018 அன்று முன்விரோதம் காரணமாக தெற்கூரில் உள்ள கடையில் நின்று கொண்டிருந்த சிவக்குமாரை, வைத்தீஸ்வரன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். இதுதொடர்பாக கேணிக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து, வைத்தீஸ்வரனை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில் இன்று முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மெகபூப் அலிகான், உணவக தொழிலாளியான சிவகுமாரை வெட்டிக்கொலை செய்த வைத்தீஸ்வரனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜரானார்.

x