புதுச்சேரியில் ரெஸ்டோ பார் தகராறில் பவுன்சர் மீது காரை எற்றி கொல்ல முயன்ற 3 பேர் கைது


புதுச்சேரி: ரெஸ்டோபார் தகராறில் பவுன்சர் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

புதுவை வினோபா நகரை சேர்ந்தவர் வசந்தராமன்(22). இவர் நகர‌ பகுதியில் உள்ள தனியார் ரெஸ்ட்ரோபாரில் பவுன்சராக வேலை செய்து வருகிறார். கடந்த 13ம் தேதி இரவு வசந்தராமன் வேலை முடித்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

அப்போது பெருமாள் கோயில் வீதி சந்திப்பில் வந்த போது பின்னால் வந்த கார் ஒன்று அதிவேகமாக வசந்தராமன் பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்து காயம் அடைந்த வசந்தராமனை, காரில் சென்றவர்கள் காரை நிறுத்தி பார்த்தனர். விபத்து சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால் காரை அங்கேயே விட்டு விட்டு காரில் இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். உடனே வசந்தராமனை பொதுமக்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர்.
அவர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வசந்தராமன் புகாரின் பேரில் கிழக்கு பகுதி போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்து நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியை போலீஸார் ஆய்வு செய்தனர்.

அதில் வசந்தராமன் பணியாற்றி வரும் ரெஸ்ட்ரோபாரில் அன்று இரவு 5 நபர்கள் மதுபோதையில் தகராறு ஈடுபட்டுள்ளனர். அவர்களை அங்கிருந்த பவுன்சர்கள் வெளியே அனுப்பி உள்ளனர். இதனால் கோபமடைந்த அவர்கள் பாரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வெளிவந்த வசந்தராமனை காரில் பின் தொடர்ந்து வந்து கொலை செய்யும் நோக்கில் பைக் மீது மோதியது தெரிய வந்தது.

இதையடுத்து போக்குவரத்து போலீஸார், கொலை செய்யும் நோக்கத்தில் விபத்து ஏற்படுத்தியதால், பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு வழக்கை மாற்றினர். இது தொடர்பாக பெரியகடை போலீஸார் தனிப்படை அமைத்து, காரின் நம்பரை வைத்து குற்றவாளிகளை தேடினர். போலீஸார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று மதுக்கடையில் 5 பேர் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை வசந்தராமன் கண்டித்து வெளியே அனுப்பியுள்ளார்.அதனால் கோபமடைந்த 5 பேரும் தங்கள் காரை வசந்தராமன் இருசக்கர வாகனத்தில் மோதவிட்டது தெரியவந்தது. அதையடுத்து செங்கல்பட்டில் சுதாகர் (32) என்பவரையும், கன்னியாகுமரியைச் சேர்ந்த ஸ்டார்வின் (30), சிபின் (32) ஆகியோரை கர்நாடக மாநிலம் ஹூப்ளியிலும் பெரியகடை காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீஸார் இன்று கைது செய்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ராகுல், அபிஷேக் ஆகியோரை தேடிவருகின்றனர்.

x