கோவை கூட்டுறவு சங்கத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை - ரூ.15.89 லட்சம் பறிமுதல்


கோவை: கோவை மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று (ஏப்.21) திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.15.89 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் சூலூர் வதம்பச்சேரியில், கூட்டுறவு சங்கம் உள்ளது. இக்கூட்டுறவு சங்கத்தின் மேலாளராக சவுண்டப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார். இக்கூட்டுறவு சங்கத்தில் 700-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், இக்கூட்டுறவு கடன் சங்கத்தில், நெசவாளர்களிடம் இருந்து லஞ்சம் பெறுவது தொடர்பான புகார்கள் குறித்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில், கூடுதல் எஸ்.பி திவ்யா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார், இன்று (ஏப்.21) மதியம் 3.30 மணிக்கு வதம்பச்சேரியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும், அலுவலக கோப்புகள் வைக்கப்பட்டிருந்த இடங்கள், மேஜைகள் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது கூட்டுறவு சங்கத்தில் கணக்கில் வராத ரூ.15 லட்சத்து 89 ஆயிரத்து 950 பணம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீஸார் அது தொடர்பாக கூட்டுறவு சங்கத்தின் மேலாளர் சவுண்டப்பன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி திவ்யா கூறும்போது, “கைத்தறி நெசவாளர்கள் தங்களது கூடங்களில் இருந்து சேலைகள் உள்ளிட்ட துணி வகைகளை உற்பத்தி செய்து தருகின்றனர். இவ்வாறு தரும் உடைகள், கோ-ஆப்டெக்ஸ் உள்ளிட்ட அரசு விற்பனையகங்கள் மூலம் விற்கப்படுகின்றன.

அப்போது குறிப்பிட்ட சதவீத தொகைகள் திரும்ப சங்கங்கள் மூலம் நெசவாளர்களிடம் வழங்கப்படும். இவ்வாறு வழங்கப்படும் தொகைக்கு ஏற்ப நெசவாளர்களிடம் இருந்து லஞ்சத் தொகை பெறுவது குறித்து தகவல் கிடைத்தது. அதன் பேரில், நடத்தப்பட்ட சோதனையில் மேற்கண்ட தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

x