மகனை கோடரியால் தாக்கி கொலை செய்து எரித்து நாடகமாடிய தாய் கைது - முசிறி அருகே பயங்கரம்


முசிறி அருகே கோபிநாத் கொன்று எரிக்கப்பட்ட இடத்தில்  மோப்பநாய் பிரிவு மற்றும் தடயவியல் பிரிவு போலீஸார் தடயங்களை சேகரித்தனர்.

திருச்சி: முசிறி அருகே மகனை கோடரியால் தாக்கி கொன்று, எரித்து கொலை செய்து நாடகமாடிய தாயை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் - செல்வி தம்பதிக்கு கோபிநாத் (26) என்ற மகனும், கவுசி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. கவுசி சென்னையில் படித்து வருகிறார். கோபிநாத் டிப்ளமா படித்து விட்டு தோட்டத்தில் விவசாய வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமான வீடு நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், அம்பாயிபாளையம் கிராமத்தில் உள்ளது. பாலசுப்ரமணியம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் செல்வியும், கோபிநாத்தும் தோட்டத்தில் உள்ள குடிசை வீட்டில் தங்கி விவசாயம் பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கோபிநாத் வேலம்பட்டி கிராமத்தில் வயலில் உள்ள வீட்டின் முன்பு வாசலில் நேற்று இரவு படுத்து உறங்கி உள்ளார். வீட்டுக்குள் தாய் செல்வி உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்காக அவரது தாயார் செல்வி வெளியே வந்தபோது, கட்டிலில் தனது மகன் கோபிநாத் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறியடித்து சத்தம் போட்டு உள்ளார். இதையடுத்து அருகில் இருப்பவர்கள் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி நெருப்பை அணைத்துள்ளனர். ஆனாலும் கோபிநாத் உடல் முழுவதும் எரிந்து போனது.

இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார், தா.பேட்டை இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், உதவி ஆய்வாளர் முத்துசாமி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று எரிந்து போன நிலையில் கிடந்த கோபிநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். திருச்சியில் இருந்து வந்த மோப்ப நாய் லீலா, தடயவியல் நிபுணர் சிவசுப்பிரமணியன், கைரேகை நிபுணர் திருலோகசுந்தர் ஆகியோர் கொண்ட குழுவினர் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், தாய் செல்வியே தனது மகனை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து தாயார் செல்வியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘விவசாயத்திற்கு வாங்கிய டிராக்டர் மற்றும் இதர கடன்கள் இருக்கும் சூழலில் வீட்டை விற்பனை செய்து அதன் மூலம் வரும் பணத்தை கொண்டு டிராவல்ஸ் நிறுவனம் தொடங்க வேண்டும் என கேட்டு மகன், தாயிடம் தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே நேற்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் கோபிநாத் வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்து உறங்கியிருக்கிறார். அப்போது தாய் செல்வி, மகன் கோபிநாத்தை கோடரியால் தாக்கி கொலை செய்து, மண்ணெண்ணெயை ஊற்றி எரித்து விட்டு, யாரோ பெட்ரோல் ஊற்றி தனது மகனை எரித்து கொலை செய்து விட்டதாக நாடகமாடியது தெரியவந்துள்ளது. இந்த கொலையில் செல்விக்கு மட்டும் தொடர்பு உள்ளதா அல்லது வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரிக்கின்றனர். இதையடுத்து, தா.பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தாய் செல்வியை கைது செய்தனர்.

x