‘ரவுடி வெள்ளைக்காளிக்கு என்கவுன்ட்டர் அச்சுறுத்தல்’ - மனைவி மனுவை எஸ்பி பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு


மதுரை: ரவுடி வெள்ளைக்காளியை என்கவுண்டர் செய்யக்கூடாது எனக் கேட்டு அவர் மனைவி அனுப்பிய மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க மதுரை எஸ்.பிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி குண்டூர் பர்மா காலனியைச் சேர்ந்த திவ்யா, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “எனது கணவர் வெள்ளைக்காளி, கடந்த 2019-ம் ஆண்டு முதல் புழல் சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த மார்ச் 22-ல் காளி என்ற காளீஸ்வரன் என்பவர் மதுரையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் என் கணவரின் நண்பர் சுபாஷ் சந்திரபோஸ் சேர்க்கப்பட்டு என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டார்.

காளி கொலை வழக்கில் என்னை கணவர் பெயரையும் சேர்த்துள்ளனர். என் கணவரை விசாரணைக்காக அழைத்துச் சென்று என்கவுண்டரில் கொலை செய்ய அதிக வாய்ப்புள்ளது. இதனால் என் கணவரை என்கவுண்டர் செய்யக்கூடாது எனக்கேட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மனு அனுப்பினேன். எனக்கு 4 வயதில் மகள் உள்ளார். இதனால் என் மனுவை பரிசீலித்து என் கணவரை என் கவுண்டர் செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும்,” என்றுமனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தனபால், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனுதாரரின் மனுவை பரிசீலித்து 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

x