முட்டம் அருகே விசைப்படகு மீது உரசிய சரக்கு கப்பல் - 22 மீனவர்கள் உயிர் தப்பினர்!


முட்டம் கடலில் சரக்கு கப்பல் உரசியதில் சேதமடைந்த விசைப்படகு.

நாகர்கோவில்: குமரி மாவட்டம் முட்டத்தில் தனியார் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து கடியப்பட்டணத்தை சேர்ந்த அருள் ரமேஷ்(50) என்பவரின் விசைப்படகில் ஈஸ்டர் முடிந்து இரவு கடலில் மீன் பிடிக்க மீனவர்கள் சென்றனர். விசைப்படகை லாரன்ஸ்(35) என்பவர் ஓட்டினார். 21 மீனவர்கள் அந்த படகில் சென்றனர்.

திங்கட்கிழமை அதிகாலை முட்டத்திலிருந்து 22 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக சென்ற பெரிய சரக்கு கப்பல் ஒன்று திடீரென விசைப்படகு மீது உரசி விட்டு சென்றது. இதனால் விசைப்பட குலுங்கியதுடன் அதிலிருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். படகில் இருந்த மாலுமி உட்பட 22 பேரும் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.

இதில் விசைப்படகின் பின்பகுதியில் இருந்த கேரஸ் பகுதி உடைந்து சேதம் அடைந்தது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்காமல் காலை கரைத்திரும்பினர். இதுகுறித்து குளச்சல் மரைன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் சேதம் அடைந்த விசைப்படகை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் விசைப்படகு மீது உரசி விட்டு நிற்காமல் சென்றது தூத்துக்குடி துறைமுகத்துக்கு செல்லும் சரக்கு கப்பல் என தெரியவந்துள்ளது. இந்த சரக்கு கப்பல் விசைப்படகு மீது மோதி இருந்தால் பெரும் உயிரிழப்பு மற்றும் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கும் என மெரைன் போலீசார் தெரிவித்தனர்.

x