ஊட்டி: விவசாய கடன் மானிய தொகையில் ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி கைது செய்யப்பட்டார்.
சென்னை அயம்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(46). இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில், ஜூனியர் அதிகாரியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். சமீபத்தில் இவருக்கு பணி மாறுதல் உத்தரவு வந்ததால், இவர் வேறு இடத்திற்கு செல்ல தயாராக இருந்தார். இந்நிலையில், ஊட்டி பாரத ஸ்டேட் வங்கி கிளையில் சமீபத்தில் தணிக்கை பணிகள் நடைபெற்றது.
இதில், மானியத்துடன் கூடிய விவசாய கடன் வழங்கும் பிரிவில் மானியத் தொகையை பயனாளிகளுக்கு வழங்கியதில் செந்தில்குமார் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதாவது பயனாளிகளுக்கு சேர வேண்டிய மானிய தொகையை அவர்களிடம் வங்கி கணக்கில் வரவு வைக்காமல், தனக்கு தெரிந்தவர்களின் வங்கி கணக்கில் வரவு வைத்து அந்த பணத்தை கையாடல் செய்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து செந்தில்குமாரின் முழு பணியையும் அதிகாரிகள் தணிக்கை செய்தனர்.
இதில் செந்தில்குமார் ரூ.7,99,146 மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி தலைமை மேலாளர் ரமேஷ்பாபு ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து டிஎஸ்பி நவீன்குமார், ஆய்வாளர் முரளிதரன் தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, செந்தில்குமாரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் செந்தில்குமார் இது போல் வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் வங்கி அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.