திருவாரூரில் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்: விசிக ஒன்றிய செயலாளர் உட்பட 5 பேர் கைது


திருவாரூர்: நிலப் பிரச்சினை தொடர்பாக, வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட 5 பேரை நீடாமங்கலம் போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள மணலூரைச் சேர்ந்தவர் கேசவன் (38), வழக்கறிஞரான இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராக உள்ளார். அதே பகுதியில் வசித்து வருபவர் புதியவன் (49) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், கேசவன் தனது வீட்டின் அருகில் 23 சென்ட் அளவுக்கு இடம் வாங்கியுள்ளார். இந்த இடம் தனது அனுபவத்தில் உள்ளதாக புதியவன் கூறி வந்தார். இதனால், அவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், கேசவன் தான் வாங்கிய இடத்தில் நேற்று முன்தினம் வேலி அமைத்தார். இது குறித்து தகவல் அறிந்த புதியவன் மற்றும் அவரது உறவினர்கள் வேலியை பிரித்து எறிந்து, கேசவனுக்கு கொலை மிரட்டல், விடுத்துள்ளனர். இது குறித்து கேசவன், நீடாமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், புதியவன், அவரது தம்பி பாஸ்கர் (47), ராஜேந்திரன் (50), விஜயகுமார் (39), ஸ்ரீதர் (42) ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர்.

x