ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மனைவி காமாட்சி(65). இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் கடைக்கு சென்று விட்டு ஊரணிபட்டி தெரு வழியாக நடந்து சென்றார்.
அப்போது, பின்னால் வந்த இளைஞர் மூதாட்டி அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். மூதாட்டி அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் துரத்தியபோது, தவறி விழுந்த அந்நபருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவரை பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் மம்சாபுரம் சிப்பந்தி காலனியைச் சேர்ந்த ராணுவ வீரர் குழந்தைவேல் (30) என தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.
விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த குழந்தைவேல், நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர் மீது ஏற்கெனவே 2 நகை பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.