சிவகாசியில் பிரபல தீப்பெட்டி நிறுவனம் பெயரில் போலி லேபிள்: தீப்பெட்டி தயாரித்த வடமாநில வியாபாரி கைது


விருதுநகர்: சிவகாசியைச் சேர்ந்த பிரபல தீப்பெட்டி நிறுவனத்தின் லேபிளை போலியாக அச்சிட்டு, தீப்பெட்டி விற்பனை செய்து வந்த வடமாநில வியாபாரியை போலீஸார் கைது செய்தனர்.

சிவகாசி சுந்தரவேல் மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சார்பில், டிரேடு மார்க் பதிவு பெற்ற 27 நம்பர் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்பட்டு, சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் லேபிளை போலியாக அச்சடித்து சந்தையில் தீப்பெட்டி விற்பனை செய்யப்படுவதாக, சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சிவகாசி டிஎஸ்பி பாஸ்கர் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி ஆலையை நிர்வாகம் செய்துவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குப்தா, சுந்தர வேல் மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தீப்பெட்டி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் போலி லேபிளை அச்சிட்டு, தீப்பெட்டி தயார் செய்து ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, சஞ்சீவ் குப்தாவை கைது செய்த போலீஸார், 342 தீப்பெட்டி பண்டல்களை பறிமுதல் செய்தனர்.

x