திருப்பத்தூர்: பெண் காவலரிடம் 13 பவுன் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் 2 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னகல்லுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி (52). ஓட்டுநர் பயிற்சி நிலையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி (45). இவர், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் இரவு 8 மணியளவில் லட்சுமி தனது வீட்டிற்கு புறப்பட்டார்.
ஜோலார்பேட்டை அடுத்த ராமானூர் அருகே சென்று கொண்டிருந்தபோது லட்சுமியை பின்தொடர்ந்து ஒரே இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் லட்சுமியை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் தங்க தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இது குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், பெண் காவலரிடம் தங்க சங்கிலியை பறித்தது கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டு பாறை கொட்டாய் பகுதியை சேர்ந்த வேடியப்பன் (35) மற்றும் தருமபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த சத்தியமூர்த்தி (31). என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சத்திய மூர்த்தி, வேடியப்பன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.