தூத்துக்குடியில் கப்பல் மாலுமி கொலை: மோட்டார் சைக்கிள் மோதிய தகராறில் விபரீதம்!


தூத்துக்குடி: மோட்டார் சைக்கிள் மோதிய தகராறில் கப்பல் மாலுமியை ஒரு கும்பல் கொலை செய்தது.

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த சகாய குமார் மகன் மரடோனா (30). இவர், கப்பல் மாலுமியாக பணிபுரிந்து வந்தார். தற்போது ஈஸ்டர் பண்டிகைக்காக விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு மரடோனா மற்றும் அவரது நண்பர் பூபாலராயபுரம் பகுதியைச் சேர்ந்த பவுல் மகன் கிளிட்டஸ் (28) உள்ளிட்டோர் திரேஸ்புரம் கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியது.

இதனால் மரடோனாவுக்கும் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் போதையில் வந்த தாளமுத்து நகர் பகுதியைச் மாடசாமி மகன் மதன்குமார் (28) மற்றும் அவரது நண்பர்கள் ஸ்ரீதர், ரிக்சன் உள்ளிட்டோருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மதன்குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மரடோனாவை சரமாரியாக வெட்டினார். தடுக்க முயன்ற கிளிட்டசும் தாக்கப்பட்டார்.

இது குறித்து அங்கிருந்தவர்கள் வடபாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். டவுன் ஏ.எஸ்.பி. மதன், காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமை யிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று மரடோனாவை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிளிட்டஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேல் சிகிச்சைக்காக நேற்று அதிகாலை மரடோனா மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து வடபகம் போலீஸார் வழக்கு பதிந்து மதன்குமார் உள்ளிட்ட கும்பலை தேடி வருகின்றனர். மதன்குமார் மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. ரவுடி பட்டியலில் அவர் இடம் பெற்றுள்ளார்.

x