புதுச்சேரி: தவளக்குப்பம் அருகே உள்ள என்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் சுந்தர் (65), கோயில் பூசாரி. இவரது மனைவி செல்வி, மகன் மணிகண்டபாலன் (29). கருத்து வேறுபாடு காரணமாக செல்வி கணவரை பிரிந்து தனியாக சென்றுவிட்டார். மகன் கிருமாம்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்ததால், சுந்தர் தனியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் சுந்தர் நேற்று அப்பகுதியில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலறிந்த தவளக்குப்பம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதையடுத்து போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், சுந்தரம் இரவு நேரத்தில் அப்பகுதியில் உள்ளவர்களை திட்டி வந்துள்ளார். இதேபோல் நேற்று முன்தினமும் அவர் திட்டினார். இந்நிலையில் நேற்று அதி காலையில் அவர் கிரைண்டர் குழவி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது என்று போலீஸார் தரப்பில் தெரிவித்தனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்ற இளைஞரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.