சமயபுரம் அருகே சோகம்: கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு


திருச்சி: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மடால வெங்கடேஷ் (19), வேலுகு லட்சுமி அரவிந்த் (19) ஆகியோர் சமயபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துவந்தனர். இந்நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் மபால வெங்கடேஷ், வேலுகு லட்சுமி அரவிந்த் ஆகியோர் தனது நண்பர்கள் 8 பேருடன் சமயபுரம் மாரியம்மன் கோயில் அருகில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றனர்.

இதில், மடால வெங்கடேஷ்க்கு நீச்சல் தெரியாது என்பதால் கிணற்றில் ஆழமில்லாத பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். இதைக் கண்ட அவரது நண்பர் வேலுகு லட்சுமி அரவிந்த், அவரை காப்பாற்ற முயன்ற போது அவரும் நீரில் மூழ்கினார்.

மற்ற நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் சமயபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு சென்று 2 மணி நேரத்துக்கு மேலாக போராடி கிணற்றில் மூழ்கிய இருவரையும் சடலமாக மீட்டனர். இது குறித்து சமயபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

x