மதுரை: கட்டிடத் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்தது தொடர்பாக ஓய்வுபெற்ற காவலரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை ஆனையூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். திருச்சியில் உள்ள காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து 2009ல் ஓய்வு பெற்றார். இவரது வீட்டுக்கு பக்கத்தில் வாடகை வீட்டில் வசித்தவர் கட்டிடத் தொழிலாளி அழகு பாண்டி (34). நடராஜனிடம் நன்கு பழகி வந்த அழகு பாண்டி, மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று காலை வீட்டுக்கு வெளியே இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
பின்னர், நடராஜன் தனது வீட்டுக்குள் சென்றபோது, அவரை பின் தொடர்ந்து அழகு பாண்டியும் சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நடராஜன் அரிவாளை எடுத்து அழகு பாண்டியை சரமாரியாக வெட்டினார். இதில், அந்த இடத்திலேயே அழகு பாண்டி உயிரிழந்தார்.
இது தொடர்பாக கூடல்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர். அழகு பாண்டி மீது ஏற்கெனவே பல்வேறு குற்றங்கள் தொடர்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.