போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குக்கு ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு 


சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் முகமது சலீம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் முகமது சலீம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டுள்ளது. நீதிபதி சுந்தர் மோகன், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வழக்கை முன்னுதாரணமாக கொண்டு ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அவரை கடந்தாண்டு ஜூனில் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை கடந்தாண்டு ஆகஸ்டில் கைது செய்தனர்.

இந்த வழக்கில் இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவி்த்து அமலாக்கத்துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி தாக்கல் செய்திருந்த பதில்மனுவில், ‘சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு மூளையாக ஜாபர் சாதிக் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் மூலமாக சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தில் சொத்துக்களும், சொகுசு கார்களையும் வாங்கி குவித்துள்ளார்.

மேலும் கடத்தல் மூலமாக கிடைத்த பணத்தை தனது குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் மட்டுமின்றி திரைப்பட இயக்குநர் அமீர் உள்ளிட்டோரின் வங்கி கணக்குகளிலும், போலியாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் வங்கி கணக்குகளிலும் செலுத்தி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஜாபர் சாதிக் ஆளுங்கட்சியான திமுகவின் முன்னாள் நிர்வாகியாக பதவி வகித்துள்ளதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. எனவே ஜாபர் சாதிக் மட்டுமின்றி அவரது சகோதரர் முகமது சலீமுக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

x