திண்டுக்கல் அருகே அதிர்ச்சி: தோட்டத்து வீட்டில் வசித்த தம்பதியை தாக்கி நகை பறிப்பு


திண்டுக்கல்: எரியோடு அருகே தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வரும் தம்பதியை கத்தியால் குத்தி 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே கிழக்கு மாரம்பாடி தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர்கள் வேளாங்கண்ணி ஆரோக்கியம் (75), கேத்தரின்மேரி (68). இவர்களது இரண்டு மகன்களும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருவதால், இந்த தம்பதியினர் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர், வயதான தம்பதியை கட்டையால் தாக்கியும், கத்தியால் குத்தியும், கேத்தரின் மேரி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச்சென்றனர். தகவலறிந்தவர்கள் காயமடைந்த தம்பதிகளை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

எரியோடு போலீசில் வேளாங்கண்ணி ஆரோக்கியம் கொடுத்த புகாரில், மது குடிப்பதற்காக பணம் இல்லாததால் தனது உறவினரான பேரன் அருண் குமார் என்பவர் மற்றொரு அடையாளம் தெரியாத நபருடன் சேர்ந்து கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தி நகையை பறித்துச் சென்றதாக தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் அருண் குமாரை தேடி வருகின்றனர்.

x