ஜிம்களுக்கு விற்பதற்காக ரூ.10 லட்சம் மதிப்பிலான ஊக்க மருந்துகள் கடத்திய இருவர் கைது @ கோவை


மேட்டுப்பாளையம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில்குமார், சங்கர் மற்றும் இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள் உள்ளிட்டவை. 

மேட்டுப்பாளையம்: கோவையில், உடற்பயிற்சி கூடங்களுக்கு விற்பதற்காக ரூ.10 லட்சம் மதிப்பிலான ஊக்க மருந்துகள் கடத்திய இருவரை காவல்துறையினர் இன்று (ஏப்.19) கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழியாக ஒரு கும்பல், உடற்பயிற்சி செய்தால் சோர்வு ஏற்படாமல் இருப்பதற்காக ஊக்க மருந்துகளை கடத்தி வருவதாக மேட்டுப்பாளையம் காவல்துறையினருக்கு இன்று (ஏப்.19) ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் தலைமையிலான மேட்டுப்பாளையம் காவல்துறையினர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள டேங்க்மேடு ஜங்ஷன் பகுதியில் இன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக ஒரு கார் வந்தது. சந்தேகத்தின் பேரில், அந்த காரை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தபோது, அதில் நிறைய பெட்டிகளில் மாத்திரைகள், மருந்துகள் இருப்பது தெரியவந்தது. காரில் இருவர் இருந்தனர். இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் கொண்டு வந்த மருந்துகளை சுகாதாரத்துறையினர் மூலம் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

அதில், பிடிபட்ட மருந்துகள் டெர்மியோ, சல்மேப், மாபெண்ட், மிரக்காலஸ், நாப்ரோபென், நியான், டெர்மேங் என உள்ளிட்ட மருந்து வகைகள் எனவும், இவை நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின் போது, வலி தெரியாமலும், அதிக ரத்த இழப்பு ஏற்படும் போது, அதை ஈடுகட்ட இருக்கும் குறைந்த ரத்தத்தை வேகமாக ஓடச் செய்வதற்காகவும் இந்த மருந்துகள் பயன்படுத்துவது என்றும், மருத்துவர்களின் பரிந்துரையின்றி இவற்றை பயன்படுத்தக்கூடாது எனவும் தெரியவந்தது. மேலும், பிடிபட்டவர்கள் ஈரோடு மாவட்டம் மூலப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(40), அதேப் பகுதியைச் சேர்ந்த சங்கர்(36) எனவும் தெரியவந்தது.

இவர்கள் இந்த மருந்துகளை, கோவை மற்றும் மேட்டுப்பாளையத்தில் உடற்பயிற்சிக் கூடங்கள் நடத்தி வருபவர்களிடம், உடல்பயிற்சி செய்யும் போது சோர்வு ஏற்படாமல் இருக்கவும், உடல் கட்டுமஸ்தாக இருக்கும் என்ற காரணங்களை கூறி, ஆர்டர் பெற்று விற்பனை செய்ய மேற்கண்ட மருந்துகளை வெளியே வாங்கி காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, ‘‘இவர்களிடம் இருந்து 2,275 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், ரூ.28 ஆயிரம் பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. மருத்துவரின் உரிய பரிந்துரைகளின்றி இதுபோன்ற ஊக்க மருந்துகளை பயன்படுத்தி உடற்பயிற்சி செய்வோர், சில சமயம் உடல்நலம் கடுமையாக பாதிக்கும் வாய்ப்புகளும், உயிரிழப்பு ஏற்படும் சூழலும் உள்ளது. இதுபோன்ற மருந்துகளை உடற்பயிற்சிக் கூடங்களில் பயன்படுத்தக்கூடாது’’என்றனர்.

x