வறுமையின் கொடுமை; மதுரையில் மகளை கொன்று தாய் தற்கொலை: 10 வயது மகனுக்கு தீவிர சிகிச்சை


மதுரை: மதுரையில் வறுமை மற்றும் நோய் பாதிப்பால் 13 வயது மகளைக் கொன்று தாய் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் 10 வயது மகனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மதுரை அனுப்பானடி பகுதியிலுள்ள தாய் நகர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த ஜெயராமன் மனைவி ஜூவகுமாரி (38). இவரது மகள் தனலெட்சுமி (13) எட்டாம் வகுப்பு படித்தார். மகன் தனசிங்க பெருமாள் (10) ஐந்தாம் வகுப்புப் படித்து வருகிறார். கணவர் இறந்த நிலையில் குழந்தைகளுடன் வசித்து வந்த ஜீவகுமாரி நோய் பாதிப்பாமல் சிகிச்சை பெற முடியாமலும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

நேற்று காலை ஜீவகுமாரி மற்றும் அவரது இரு குழந்தைகளும் வீட்டுக்குள் மயங்கி கிடந்தது அக்கம், பக்கத்தினருக்குத் தெரிய வந்தது. மூவரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜீவகுமாரி, தனலட்சுமி உயிரிழந்தது தெரிந்தது. தனசிங்க பெருமாளுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் அளிக்கப்படுகிறது. கீரைத்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், "கணவர் இறந்த நிலையில் நோய் பாதிப்பு மற்றும் வறுமை காரணமாக இரு குழந்தைகளுடன் ஜீவகுமாரி மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால், இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதன்படி, நேற்று முன்தினம் இரவு 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு ஜீவகுமாரியும் விஷம் குடித்துள்ளார். தாய், மகள் உயிரிழந்த நிலையில், மகனுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது", என்றனர்.

x