தஞ்சை: ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயி கொலை வழக்கில் தேட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் 15 நாட்களுக்கு பிறகு சரணடைந்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆம்பலாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் தீர்க்கரசு(54). விவசாயியான இவர், தனது நிலத்தை அடமானம் வைத்து, ரூ.7 லட்சம் ரொக்கம் வேண்டும் என பாப்பாநாட்டை சேர்ந்த திருகுமாரிடம் (50) கேட்டுள்ளார். அப்போது, திருகுமார் நிலத்தை கிரயம் செய்து கொடுத்து விட்டு, பணத்தை திரும்ப தரும்போது, நிலத்தை மீண்டும் எழுதித் தருவதாக தீர்க்கரசுவிடம் கூறி, நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டு பணத்தை கொடுத்தார்.
பின்னர், தீர்க்கரசு வட்டியுடன் பணத்தை திருகுமாரிடம் கொடுத்து விட்டு, நிலத்தை கேட்டபோது, நிலத்தை தர திருகுமார் மறுத்துள்ளார். இதில், இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், ஏப்.2-ம் தேதி இரவு கடைத்தெருவுக்கு வந்த தீர்க்கரசுவை 4 பேர் அரிவாளால் வெட்டினர். இதுகுறித்து பாப்பாநாடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக, திருகுமாரின் உறவினரான சசிகுமார், கலையரசன், முனீஸ்குமார் ஆகியோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தீர்க்கரசு ஏப்.8-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, திருகுமாரை உடனே கைது செய்ய வேண்டும். பாப்பாநாடு காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, தீர்க்கரசுவின் உடலை வாங்க மறுத்து, ஏப்.9-ம் தேதி காவல் நிலையம் முன்பு உறவினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் பேச்சுவார்த்தை நடத்தியதின்பேரில், உடலை பெற்றுக் கொண்டனர்.
இது தொடர்பாக பாப்பாநாடு போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து, திருக்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் ஒரத்தநாடு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நீதிபதி முன்னிலையில் திருகுமார் நேற்று சரணடைந்தார். நீதிபதி விசாரணை நடத்தி, திருகுமாரை 15 நாட்கள் திருச்சி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.