வேலூர்: 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட மேஸ்திரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (28). கட்டிட மேஸ்திரியான இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர், கடந்த 2023ம் ஆண்டு வேலூருக்கு கட்டிட வேலைக்காக வந்தார்.
வேலூர் கஸ்பா பகுதியில் 10ம் வகுப்பு படித்த 15 வயது சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, முத்துக்குமார் சிறுமியை காதலிப் பதாகக் கூறி கடத்திச் சென்றுள்ளார். இதற்கிடையில், சிறுமியை காண வில்லை என வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சிறுமியை தேடி வந்தனர்.
விசாரணையில், முத்துக் குமார் சிறுமியை கடத்திச் சென்றதுடன் பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, சிறுமியை கடத்திச் சென்றது, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இதில், குற்றச்சாட்டு உறுதியான நிலையில் முத்துக்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் முத்துக்குமாரை காவல் துறையினர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.