திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்ட விவகாரத்தில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை நேற்று சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திருமலை வாசன் உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவாரங்குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்ற னர். தற்போது மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் நடந்து வரும் நிலையில், கடந்த 15ம் தேதி பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டி மற்றும் பள்ளி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்யும் காட்சி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வைரலானது.
இதைக்கண்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர் தேர்வு எழுத வந்த மாணவர்களை தூய்மைப் பணியில் ஈடுபடுத்திய ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பான செய்தி நாளிதழ்களில் வெளியானது. இந்நிலையில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை தூய்மைப் பணியில் ஈடுபட்ட விவகாரத்தில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை உமாராணியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திருமலை வாசன் நேற்று உத்தரவிட்டார்.