தூத்துக்குடி: காயல்பட்டினத்தில் வீட்டில் லாக்கரில் வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 38 தங்க நாணயங்களை திருடிய வழக்கில் வேலைக்கார பெண் உட்பட 3 போலீசார் கைது செய்தனர்.
காயல்பட்டினம் கோமான் நடுத்தெருவைச் சேர்ந்தவர் யாகூப். இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாஜிதா பர்வீன். இவர்களுக்கு 2 மகன்கள். ஒரு மகள் உள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி சாஜிதா பர்வீன், வீட்டு லாக்கரில் இருந்து பொருட்களை எடுத்துள்ளார். அப்போது லாக்கரில் வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான தலா 8 கிராம் எடை கொண்ட 38 தங்க நாணயங்கள் இருந்த சிறிய வடிவிலான பெட்டியை வெளியில் வைத்து விட்டு லாக்கரை பூட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜூலை மாதம் மீண்டும் லாக்கரை திறந்து பார்த்தபோது, 38 தங்க நாணயங்கள் காணாமல் போனது தெரியவந்தது. அப்போது தான், தங்க நாணயங்கள் இருந்த பெட்டியை ஞாபக மறதியால் வெளியே வைத்திருந்ததும், அது திருட்டு போயிருப்பதும் தெரியவந்தது.
இது குறித்து ஜூலை மாதமே அவரது மகன் ஷேக் முஹ்ஸின் ஆறுமுகநேரி போலீஸில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபரில் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்தார். ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் படி திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையிலான தனிப் படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் சாஜிதா பர்வீன் வீட்டில் வேலை செய்யும் அருணாசலபுரத்தை சேர்ந்த தீபிகா என்ற அல்பியா தனது உறவினர்களுடன் சேர்ந்து தங்க நாணயங்களை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து தீபிகா என்ற அல்பியா (35), அவரது சகோதரி இசக்கி தங்கம் (42), இசக்கி தங்கத்தின் மகன் தமிழரசன் (23) ஆகிய 3 பேரை தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.