ஈரோடு: தாளவாடியில் மின் தடையை போக்க, ரூ.1,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். விவசாயி. இவரது தோட்டத் துக்கான மின் விநியோகம் கடந்த 15 நாட்களுக்கு முன் தடைபட்டது. இது தொடர்பாக புகார் அளித்தும், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், மின் தடையை சரி செய்ய ரூ.1,000 லஞ்சம் தர வேண்டும் என அப்பகுதியில் பணிபுரியும் மின்வாரிய ஊழியர் மணி கண்டன் கேட்டுள்ளார். இதன்படி, அவருக்கு விவசாயி செந்தில், ரூ.1,000 லஞ்சமாக வழங்கியுள்ளார். அதனை தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதையடுத்து லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில், மணிகண்டனை பணியிடை நீக்கம் செய்து மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.