திருச்சி: திருவானைக்காவல் டிரங்க் ரோடு ஏயூடி நகரைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (45). சமயபுரம் பகுதியில் உள்ள கடையில் டீ மாஸ்டர் இருந்தார். இவரது மகன் மோகன்ராஜ் (19). சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள கடையில் டீ மாஸ்டராக உள்ளார்.
இந்நிலையில், நேற்று மது போதையில் வீட்டில் உள்ளவர்களிடம் சோமசுந்தரம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதை மோகன் ராஜ் தட்டிக் கேட்டதையடுத்து, இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, மோகன் ராஜ் ஆத்திரமடைந்து மரக்கட்டையை எடுத்து சோம சுந்தரத்தை தலையில் அடித்துள்ளார்.
இதில் மயங்கி விழுந்த சோம சுந்தரத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து சோம சுந்தரம் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மோகன் ராஜை கைது செய்தனர்.