கரூர்: தாந்தோணிமலையில் ரமேஷ்குமார் என்பவர் ஹோட்டல் நடத்தி வந்தார். இதற்கு உரிமம் பெற 2014, அக்டோபர் மாதம் கரூர் நகராட்சியில் தாந்தோணி பிரிவு துப்புரவு ஆய்வாளர் ஆர்.செல்வராஜை அணுகியுள்ளார். அப்போது, செல்வராஜ் ரூ.3,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ்குமார், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஆலோசனைப்படி, 2014, அக்.10ம் தேதி ரமேஷ் குமார் ரூ.3,000 லஞ்ச பணத்தை கொடுத்தார். அதை செல்வராஜ் பெரற்றபோது, ஊழல் தடுப்பு போலீஸார் அவரை கையும், களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
கரூர் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் சிறப்பு நீதிபதி என்.எஸ்.ஜெய பிரகாஷ் நேற்று தீர்ப்பளித்தார். இதில், செல்வராஜுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20,000 அபராதம் விதித்தும், அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.