சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம்: சிவகங்கையில் தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை


சிவகங்கை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் அருகே கொத்தரியைச் சேர்ந்தவர் பழனி என்ற பழனிசாமி (56). கொட்டகை அமைக்கும் தொழில் செய்து வந்தார். 2022 நவம்பரில் கொட்டகை அமைக்க சென்ற இடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து பழனிசாமியை கைது செய்தனர்.

இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பழனிசாமிக்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக வாழ்நாள் சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதமும், சிறுமியை கர்ப்பமடைய செய்தது தொடர்பாக மற்றொரு வாழ்நாள் சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி கோகுல்முருகன் தீர்ப்பளித்தார்.

இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டை அரசு வழங்க உத்தரவிட்டார்.

x