ஒட்டன்சத்திரத்தில் போலி வருமான வரி அதிகாரி கைது: போலீஸாரிடம் சிக்கியது எப்படி?


சந்திரசேகரன்

ஒட்டன்சத்திரம்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் கே.சந்திரசேகரன் (75). இவர் மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொழிலதிபர்கள், செங்கல் சூளை நடத்தும் உரிமையாளர்களிடம் தன்னை வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி பணமோசடியில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டியைச் சேர்ந்த தொழிலதிபர் செந்தில்குமாருக்கு சொந்தமான சிட் பண்ட் நிறுவனத்துக்குச் சென்று, அடையாள அட்டையைக்காட்டி தான், வருமான வரித்துறை அதிகாரி என்றும் இந்த நிறுவனத்தில் சோதனை நடத்த இருப்பதாகவும் சந்திரசேகரன் கூறியுள்ளார். பின்னர், சோதனை நடத்தாமல் இருக்க பணம் கேட்டுள்ளார்.

சந்தேகமடைந்த ஊழியர்கள் சத்திரப்பட்டி போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீஸார் சந்திசேகரன் மற்றும் அவர் வந்த காரின் ஓட்டுநரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இவர் பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறித்ததும், சில மாதங்களுக்கு முன் சத்திரப்பட்டியில் தொழிலதிபர் செந்தில்குமார் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்ததை அறிந்து, மீண்டும் சோதனை நடக்க இருப்பதாகக் கூறி பணம் பறிக்கத் திட்டமிட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, சந்திரசேகரனை கைது செய்த போலீஸார், தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

x