திருச்சி: திருச்சியில் விழியிழந்தோர் பள்ளி வகுப்பறைக்குள் பார்வையற்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி பார்வையற்றோர் சங்கத்தினர் நேற்று அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனை எதிரில் அரசு விழியிழந்தோர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறன் மாணவிகள் பயின்று வருகின்றனர். வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் தங்கி பயில பள்ளி வளாகத்திலேயே விடுதியும் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பிளஸ் 2 படிக்கும் 11 பேர் உட்பட 90 மாணவிகள் தங்கி இருந்தனர்.
இந்த விடுதியில் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த வெ.ராஜேஸ்வரி(18) என்ற பிளஸ் 2 மாணவியும் தங்கி, பள்ளியில் படித்து வந்தார். பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், ராஜேஸ்வரி நேற்று முன்தினம் பள்ளி வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து விடுதி கண்காணிப்பாளர் அனிதா அளித்த தகவலின்பேரில், அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸார், அங்கு சென்று மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அந்த மாணவி ஒருவரை காதலித்து வந்ததாகவும், அதற்கு பள்ளி தரப்பிலும், அந்த மாணவியின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால், மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசு மருத்துவமனை முன்பு பார்வையற்றோர் சங்கத்தின் சார்பில் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று திரண்டு மாணவி தற்கொலை விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக் கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.