காஞ்சிபுரம்: குன்றத்தூரை சேர்ந்தவர் ஹரிஹரன் (44). இவர் தாம்பரம் பகுதியில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் அலுவலகத்தை கடந்த 2023-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.
இவர் வெளிநாட்டு கப்பலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல பேரிடம் ரூ.5 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வேலையும் வாங்கித் தராமல், போனையும் எடுக்காமல் இருந்துள்ளார். இவரால் பாதிக்கப்பட்ட மணிகண்டன் (36), நல்லசிவம், தினேஷ் உள்ளிட்ட 7 பேர் கடந்த டிசம்பர் மாதம் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதில் ஹரிஹரன் ரூ.25 லட்சம் அளவுக்கு ஏமாற்றியுள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த தாம்பரம் போலீஸார் தலைமறைவாக இருந்த ஹரிஹரனை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நிர்மலா என்பவரைத் தேடி வருகின்றனர்.