கன்னியாகுமரி: ஆன்லைனில் மோசடியாக வெளியான விளம்பரத்தைப் பார்த்து, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய சமையல் எரிவாயு விற்பனை நிலையம் அமைப்பதற்காக, குமரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் விண்ணப்பித்திருந்தார். அவரிடம் இருந்து, இணையதள மோசடிக் காரர்கள் பல்வேறு தவணைகளில் சுமார் 50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, விற்பனை நிலையம் அமைத்து தராமல் மோசடி செய்தனர்.
ஏமாற்றப்பட்டதை அறிந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். விசாரணையில், சைபர் குற்றவாளிகள் டெல்லியில் இருந்து ஏமாற்றியது தெரிய வந்தது. சைபர் கிரைம் ஆய்வாளர் சொர்ணராணி, உதவி ஆய்வாளர்கள் அஜ்மல் ஜெனிப், பெர்லின் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர், டெல்லி சென்றனர்.
ஆன்லைன் மூலம் மோசடி செய்த ஹரியானா பரிதாபாத்தை சேர்ந்த வினோத் குப்தா என்பவரின் மகன் சுதிர் குப்தா (32), டெல்லியைச் சேர்ந்த சுரேந்தர் குமார் அகர்வால் என்பவரின் மகன் அன்குஷ் அகர்வால் (36) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், ஒரு லேப் டாப், 14 சிம் கார்டுகள், 7 ஏடிஎம் கார்டுகள், 2 வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ரூ.5,50,000 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.