திருச்சி: திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை சாலையில் தனியார் கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வந்த ஒரு பார்சலில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாலக்கரை போலீஸாருக்கு கூரியர் நிறுவன ஊழியர்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் வந்து சோதனை செய்ததில், போதை மாத்திரை இருப்பது உறுதியானது.
அப்போது, போதை மாத்திரையை வாங்க வந்த புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி(29), சந்தோஷ்(26) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்து, அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், பார்சலில் வந்த தடை செய்யப்பட்ட 100 போதை மாத்திரைகள், ஊசி ஆகியவற்றையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.