வாரிசு சான்றிதழுக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் - திருப்பூரில் பெண் வருவாய் ஆய்வாளர் கைது


திருப்பூர்: வாரிசு சான்றிதழ் பெற 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் இன்று கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் முத்தனம்பாளையம் ரங்க கவுண்டம்பாளையத்தை ராஜேந்திரன் கடந்த பிப்ரவரியில் உயிரிழந்தார். இதையடுத்து முதலமைச்சர் நிவாரண நிதி பெற, வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக இவரது மகன் ஜீவா, நல்லூர் வருவாய் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது இவரது விண்ணப்பத்தை அங்கீகரித்து வாரிசு சான்றிதழ் வழங்க வருவாய் ஆய்வாளர் மைதிலி ரூ. 7 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

அவ்வளவு தொகை தர முடியாது என ஜீவா தெரிவித்ததை தொடர்ந்து, ரூ. 2 ஆயிரம் தரும்படி மைதிலி கேட்டுள்ளார். எனவே லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஜீவா புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் கௌசல்யா தலைமையிலான போலீஸார் ஜீவாவிடம், ரசாயனம் தடவப்பட்ட ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை வழங்கியுள்ளனர்.

இன்று வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சென்ற ஜீவா, மைதிலியிடம் ரசாயனம் தடவப்பட்ட ரூ. 2 ஆயிரத்தைக் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மைதிலியை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

x