காதலனோடு சேர்த்து தீவைத்துக்கொண்ட காதலி... அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்த சோகம்


ஆகாஷ் - சிந்துஜா

மயிலாடுதுறையில் காதல் பிரச்சினையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போதே தன்மீதும், காதலன்மீதும் காதலி பெட்ரோல் ஊற்றி தீவைத்ததில் காதலன் உயிரிழந்த நிலையில், தற்போது காதலியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ் (24). இவர் பூம்புகார் கல்லூரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடலூர் மாவட்டம், புவனகிரி கச்ச பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த நாகப்பன் மகள் சிந்துஜா, மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு பொருளாதாரம் பயின்று வந்தார். இவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வந்தது தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.

தீயில் எரிந்த பொருட்கள்

இந்நிலையில், கடந்த 9-ஆம் தேதி ஆகாஷ், சிந்துஜா ஆகிய இருவரும் பூம்புகார் கடற்கரைக்குச் சென்றுவிட்டு மயிலாடுதுறைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மறைத்து வைத்திருந்த பெட்ரோலை, ஆகாஷ் மீதும் தன் மீதும் ஊற்றி தீ வைத்தார் சிந்துஜா.

காதலர்கள் இருவரும் பலத்த தீக்காயங்களுடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து ஆகாஷ் திருவாரூர் மருத்துவக்கல்லூரியிலும், சிந்துஜா தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சை பெற்று வந்தனர்.

சிகிச்சை பெற்ற காதலர்கள்

ஆகாஷ் கடந்த வாரம் திருவாரூரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிந்துஜாவும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் வாசிக்கலாமே...

x