அமைச்சரை கைது செய்தது அமலாக்கத்துறை... ஜார்க்கண்ட் அரசியலில் அடுத்த பரபரப்பு!


ஆலம்கீர் ஆலம்

பணமோசடி வழக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆலம்கீர் ஆலம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சரின் தனிச் செயலாளரின் வீட்டு வேலைக்காரரின் வீட்டில் இருந்து ரூ.35 கோடி மீட்கப்பட்ட நிலையில் இவர் கைதாகியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஊரக வளர்ச்சித் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய ராஞ்சியில் உள்ள மண்டல அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமைச்சர் ஆலம்கிருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஆலம்கிர் ஆலத்திடம் அமலாக்கத்துறையினர் நேற்று சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்றும் விசாரணை தொடர்ந்த நிலையில் ஆலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறை

முன்னதாக, ஊரக மேம்பாட்டு திட்டத்தில் முறைகேடு செய்ததாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து கடந்த 7 ம் தேதி அமலாக்கத்துறை சார்பில் அமைச்சர் ஆலம்கீர் ஆலமின் உதவியாளர் சஞ்சீவ் லாலில் பணியாளர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின்போது மொத்தம் ரூ.35.23 கோடி ரொக்கப்பணம் சிக்கியது. இதையடுத்து சஞ்சீவ் லால் மற்றும் அவரது பணியாளர் ஜஹாங்கீர் ஆலம் ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்தனர்.

ஆலம்கீர் ஆலம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை நடத்தி வருகின்றன. இம்மாநிலத்தில் முதல்வராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், புதிய முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சம்பாய் சோரன் பொறுப்பேற்றுள்ளார். தற்போது இவரது அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பணியாற்றிய காங்கிரஸ் கட்சியின் ஆலம்கீர் ஆலம் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x