உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் ரீல்ஸுக்காக, பரபரப்பான சாலையில் கடத்தல் ஷுட்டிங் எடுத்து, பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்திய 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர்கள் அஜித், தீபக் மற்றும் அபிஷேக். இவர்கள் சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், விருப்பங்களைப் (லைக்குகள்) பெறுவதற்காகவும் ஆசைப்பட்டு, போலி கடத்தலை மையமாகக் கொண்ட ஒரு ரீல்ஸை படம்பிடிக்க முடிவு செய்தனர்.
இதற்காக நொய்டாவின் பரபரப்பான சாலையில் ஒரு இளைஞர், மற்றொரு இளைஞரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றுவது போன்று நடிப்பில் ஈடுபட்டனர்.
இதனை அருகில் இருந்த மற்றொரு நபர் கேமராவில் ஷுட்டிங் செய்தார். ஆனால், இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் அறியாமல், உண்மையிலேயே யாரையோ கடத்துகிறார்கள் என நினைத்து, தங்கள் மொபைலில் வீடியோ பதிவு செய்து பல்வேறு சமூக ஊடக தளங்களில் பகிர்ந்தனர்.
இந்த வீடியோ, நொய்டா மக்களிடையே வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. காவல் துறையினரின் கவனத்தையும் பெற்றதைத் தொடர்ந்து நொய்டாவின் செக்டர் 20 போலீஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
இதில், மேற்கண்ட சம்பவம் ரீல்ஸுக்காக இளைஞர்கள் நடித்தது என்பது தெரிய வந்ததையடுத்து, அஜித், தீபக் மற்றும் அபிஷேக் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து உதவி துணை போலீஸ் கமிஷனர் (ஏடிசிபி) மணீஷ் குமார் மிஸ்ரா கூறுகையில், "மூவரின் செயலும் கண்டனத்துக்குரியது. இவர்கள் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது மட்டுமின்றி அமைதியையும் சீர்குலைத்துள்ளனர்” என்றார்.
இந்நிலையில் சமூக ஊடக லைக்குகளை பெறுவதற்காக ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு மூன்று இளைஞர்களும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதையும் வாசிக்கலாமே...
முடிதிருத்தும் கடையில் திடீரென நுழைந்த ராகுல் காந்தி; திக்குமுக்காடிப் போன ஊழியர்!