அரியலூரில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து... 4,000 லிட்டர் பெட்ரோல், 8,000 லிட்டர் டீசல் சாலையில் கொட்டியதால் பரபரப்பு!


டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து 4 ஆயிரம் லிட்டர் பெட்ரோல், 8 ஆயிரம் லிட்டர் டீசல் சேதம்

அரியலூர் அருகே பெட்ரோல் டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், லாரியில் இருந்த எரிபொருள் சாலையில் கொட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம் தவுத்தாய்க்குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா பெட்ரோல் பங்க் என்ற எரிபொருள் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையத்திற்கு திருச்சியில் இருந்து 4 ஆயிரம் லிட்டர் பெட்ரோல், மற்றும் 8 ஆயிரம் லிட்டர் டீசல் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று அரியலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. வாரணவாசி கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலை ஓரமாக உள்ள மின்கம்பத்தில் மோதியது.

தீப்பற்றாமல் இருக்க ரசாயன நுரையை பீய்ச்சி அடிக்கும் தீயணைப்புத்துறையினர்

இதில் டேங்கர் லாரி சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்து காரணமாக லாரியில் இருந்த 4 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் மற்றும் 8 ஆயிரம் லிட்டர் டீசல் ஆகியவை சாலையோரம் இருந்த பள்ளத்தில் கீழே கொட்டியது.

இது குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வெயில் காலம் என்பதால் பெட்ரோல் மற்றும் டீசல் எளிதில் தீப்பற்றக் கூடிய அபாயம் இருப்பது தெரியவந்தது. இதனால் ரசாயன நுரையுடன் கூடிய தண்ணீரை, லாரி மற்றும் பெட்ரோல், டீசல் கொட்டிய இடத்தில் தீயணைப்புத் துறையினர் பீய்ச்சி அடித்தனர்.

விபத்திற்குள்ளான லாரி கிரேன் மூலம் மீட்கப்பட்டது

தொடர்ந்து கிரேன் மூலம் லாரியை மீட்டு அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், அது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்த ஓட்டுநர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x