மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த இளைஞரை மர்மநபர்கள் அடித்துக் கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய சம்பவம் கலபுர்கியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், கர்நாடகா மாநிலம், கலபுர்கியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர் அடித்துக் கொலை செய்து உடல் கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலபுர்கியில் அஃசல்பூர் தாலுகாவில் உள்ள கங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாவீத் சின்னமல்லி (25). இவர் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளளார். அத்துடன் அவர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு வீடு, வீடாக வாக்குசேகரித்தார். இதனால், அவருக்கும் சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜாவீத் உடல் கிணற்றில் கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள், கங்காபுரம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், கிணற்றுக்குள் கிடந்த ஜாவீத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போது, அமாவாசையன்று (மே 7) பார்ட்டி என்று சிலர் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் தான் ஜாவீத்தை அடித்துக் கொலை செய்து உடலை கிணற்றில் வீசியது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு சய்து தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தவர் கொலை செய்யப்பட்டு அவரது உடலை கிணற்றில் மர்மநபர்கள் வீசி விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.