புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேரிடம் குரல் மாதிரி பரிசோதனைகள் இன்று நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டருந்தது தெரிய வந்தது. இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பலரிடமும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்பட்ட நிலையில், அதில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை. அறிவியல் பூர்வமான சாட்சியங்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், சம்பவம் நடந்தபோது வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட ஆடியோக்களின் அடிப்படையில், குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸார் திட்டமிட்டனர்.
இது தொடர்பாக மூன்று பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி சி.பி.சி.ஐ.டி போலீஸார் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு மார்ச் மாதம் 25- ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நீதிமன்றத்தில் ஆஜரான மூன்று பேரிடமும் குரல் பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்.
அதையடுத்து இரண்டு பெண்கள் உள்ளிட்ட அவர்கள் மூன்று பேருக்கும் இன்று சென்னை மயிலாப்பூர் தடய அறிவியல் துறை அலுவலகத்தில் குரல் மாதிரி பரிசோதனை நடைபெற்றது. குரல் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று பேரையும் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் ஆய்வகத்திற்கு அழைத்து வந்தனர்.
ஆய்வகத்தில் அவர்களை வெவ்வேறு விதமாகவும், சம்பந்தப்பட்ட குற்ற சம்பவத்தில் பேசியதாக கூறப்படும் பகுதியை எழுதிக் கொடுத்தும் பேசச்சொல்லி குரல் மாதிரி பதிவு செய்யப்பட்டது.
குரலின் அதிர்வின் அளவு, குரல் ஏற்ற இறக்கங்கள் ஆகியவை அளவிடப்பட்டு ஏற்கனவே பெறப்பட்டுள்ள வாட்ஸ்அப் உரையாடல்கள், செல்போன் தகவல்களுடன் ஒப்பிடப்படும். குறிப்பிட்ட நாட்களுக்குள் ஆய்வு செய்யப்பட்ட குரல் மாதிரியின் முடிவுகள் நீதிமன்றத்தில் நேரடியாக தடய அறிவியல் துறை மூலம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?
20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!