தூத்துக்குடியில் மது போதையில் பெற்ற தாயை கத்தியால் குத்திப் படுகொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மட்டகடை அருகே உள்ள வடக்கு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் குடோடிடல்டா. இவரது கணவர் ஞானதீபம்.
கணவன் மனைவி இடையேயான பிரச்சினை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களது 3வது மகனான ஜெயின், அதே பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
ஜெயின், மாற்று சமூகத்தில் திருமணம் செய்துள்ள நிலையில் அடிக்கடி தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு தாய் குடோடில்டா தனியாக வீட்டில் இருந்த நிலையில், மது போதையில் சென்ற ஜெயின் தனது தாயுடன் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில், ஜெயின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குடோடில்டாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த குடோடில்டா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக ஜெயின் அங்கிருந்து தப்பிச்சென்றார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் தொடர்பாக வடபாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், குடோடில்டாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தப்பியோடிய ஜெயினை தீவிரமாக தேடி வந்தனர்.
இதனிடையே கிருஷ்ணராஜபுரம் அருகே பதுங்கியிருந்த ஜெயினை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதையில் மகனே பெற்ற தாயை, கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.