பகீர்... குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கணவன், மனைவி தற்கொலை முயற்சி... தீவிர சிகிச்சை


தற்கொலை முயற்சி

கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கணவன், மனைவி இருவரும் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் தட்டான்விளை பெருமாள் நகரை சேர்ந்தவர் பிரவீன் (30). இவரது மனைவி ரூபா (28). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தையும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. பிரவீன் மர வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் பிரவீனுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் அவரால் கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை.

இந்தநிலையில், மனைவி ரூபாவிடம் கடன்காரர்கள் நெருக்கடி கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் தற்கொலை செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்தனர். நேற்று இரவு பிரவீன் விஷ மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். முதலில் குழந்தைகளுக்கு கொடுத்தனர். பின்னர் பிரவினும், ரூபாவும் விஷம் குடித்தனர். விஷம் குடித்த பிறகு பிரவீன் வீட்டிலிருந்து கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதுகுறித்து நேசமணிநகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து மயங்கிய கிடந்த 4 பேரையும் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாகர்கோவில் ரயில் நிலையம்

இதனிடையே, வீட்டில் இருந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், தொழிலில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. இதனால் ரூ.20 லட்சம் வரை கடன் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்தனர். ஆனால் பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை. இதனால் இந்த முடிவை எடுத்துக் கொண்டதாக குறிப்பிட்டு இருந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

x